என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அமைச்சர் தங்கமணி"
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர்கள் முருகேசன், மோகன் ஆகியோர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்.
அவர்கள் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று இரவு திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து அவர்கள் இருவரையும் பார்த்தார்.
டாக்டர்களிடம் இருவருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அவர்களது இருவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயலால் தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் கீழே விழுந்துள்ளன. 20 மின் கோபுரங்கள் வெடித்து சிதறி உள்ளன. 219 துணை மின் நிலையங்கள் சேதம் அடைந்தன. இவற்றை சீரமைக்கும் பணியில் போர்க்கால அடிப்படையில் 21 ஆயிரத்து 461 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இன்னும் 55 துணை மின்நிலையங்கள் சீரமைக்கப்பட வேண்டியது உள்ளது. மின்கம்பங்கள் நடும் பணிகளும் இன்னொரு புறம் தீவிரமாக நடந்து வருகிறது.
பொதுவாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பொறுத்தவரை நகர பகுதிகளில் மின் இணைப்பு வழங்கும் பணியானது இன்னும் ஓரிரு நாட்களில் முழுமையாக வழங்கப்பட்டு விடும். தஞ்சாவூர் நகர பகுதியில் 98 சதவீதமும், திருவாரூரில் 60 சதவீதமும், நாகை நகர பகுதியில் 95 சதவீதமும் மின் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. கிராமப்பகுதிகளை பொறுத்தவரை சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைய இன்னும் ஒரு வார காலம் ஆகும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி 2 ஊழியர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது தனியார் ஒருவர் ஜெனரேட்டர் போட்டதால் தான் இந்த சம்பவம் நடந்து விட்டதாக கூறப்படுகிறது. அது உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #MinisterThangamani
‘கஜா’ புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. அவற்றை சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதற்காக அமைச்சர் தங்கமணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதனை பார்வையிட்ட அமைச்சர் தங்கமணி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மின்கம்பங்கள், உயர் மின் அழுத்த கோபரங்கள், துணை மின் நிலையங்கள், மின் மாற்றிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் துரிதமாக மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 84 ஆயிரத்து 736 மின் கம்பங்கள், 4 ஆயிரத்து 320 கி.மீ. தொலைவு வரையிலான மின் கம்பிகள், 841 மின் மாற்றிகள், 201 துணை மின் நிலையங்கள் முற்றிலும் செயல் இழந்துள்ளன.
பணிகள் முடிவடைந்த பகுதிகளுக்கு தற்போது மின்சாரம் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மின் வாரியத்திற்கு மட்டும் ரூ.1,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. முழுமையான கணக்கீட்டுக்கு பின்னரே மொத்த மதிப்பீடு தெரியவரும்.
மாவட்டத்தில் ஏதாவது ஒரு விதத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அது குறித்து கணக்கீடு பட்டியலில் அவர் சேர்க்கப்படுவார். எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #TNMinister #Thangamani
கஜா புயல் நேற்று நள்ளிரவு கரையை கடந்த போது நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மிக பலத்த சேதம் ஏற்பட்டது. ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள், செல்போன் டவர்கள் சாய்ந்து விழுந்தன.
இதுபற்றி மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கஜா புயலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதை உணர்ந்து முன்கூட்டியே முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வந்தோம்.
இதற்காக புயல் பாதித்த திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க இரவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
புயலின் வேகம் அதிகமாக இருந்ததால் ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்து விட்டது. பல இடங்களில் பெரிய பெரிய மரங்கள் மின் வயர்கள் மீது விழுந்ததால் கம்பிகள் அறுந்து விழுந்து கிடக்கிறது.
ஆயிரக்கணக்கான இடங்களில் டிரான்ஸ் பார்மர்கள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது.
தஞ்சாவூரில் 5 ஆயிரம் மின் கம்பங்கள், திருவாரூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் மின் கம்பங்கள் நாகை மாவட்டத்தில் 4 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்து கிடக்கிறது. இவற்றை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள்.
பல இடங்களில் மரங்கள் விழுந்து கிடப்பதால் அதை அகற்றிய பிறகுதான் மின் கம்பங்களை சரி செய்ய முடிகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் நேரடியாக சென்று பணிகளை பார்வையிட்டு வருகிறேன்.
மின் வினியோகம் சீராக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரிகளுக்கு முதலில் மின் இணைப்பு கொடுத்து வருகிறோம். அதைத் தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கு மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
எங்களிடம் போதிய மின் கம்பங்கள் இருப்பு உள்ளதால் தேவைப்படும் பகுதிகளுக்கு உடனுக்குடன் மின் கம்பங்களை அனுப்பி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் சத்ய கோபால் கூறியதாவது:-
புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு 6 மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டிருந்தது. குடிசை வீடுகள், ஆஸ்பெஸ்டாஸ், தகர கொட்டகை வீடுகளில் வசிப்பவர்கள் நிவாரண முகாமுக்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
மொத்தம் உள்ள 471 நிவாரண முகாம்களில் 81,948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.
மீட்பு குழுவினர் அனைவரும் களத்தில் இருந்து பணியாற்றி வருகின்றனர். சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #Gaja #MinisterThangamani
தி.மு.க. தலைவராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் முதல் தடவையாக நேற்று தஞ்சைக்கு வந்தார்.
தஞ்சையில் இன்று நடைபெறும் பல்வேறு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் வந்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் வரும் போது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகே தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் நேற்று மாலை பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி சுமார் 300-க்கும் மேற்பட்டோர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா சிறைக்கு சென்றார். அதன் பின் அதிர்ஷடத்தில் விபத்து போல் எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சர் ஆனார்.
பொதுப் பணித்துறையையும், நெடுஞ்சாலைத்துறைகளையும் தன்வசம் வைத்து கொண்டு இதன் மூலம் ரூ.3ஆயிரம் கோடி வரை அவருடைய உறவினர்களுக்கு டெண்டர் வழங்கி ஊழல் செய்துள்ளார்.
முதல்- அமைச்சர் மற்றும் துணை முதல்- அமைச்சர் மட்டுமின்றி அமைச்சர்களும் ஊழலில் திளைத்து வருகின்றனர். அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஐயபாஸ்கர் ஆகியோர் மீது சி.பி.ஐ. விசாரணை வந்து கொண்டிருக்கிறது.
ஜெயலலிதா இறந்த பிறகு அவர் செய்த ஊழலை விட எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் ஊழல் அதிகமாக நடைபெறுகிறது.
இந்தியாவிலேயே ஒரு முதல்வர் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்றால் அது எடப்பாடி பழனிசாமி மீதுதான். எனவே இதற்கு பிறகாவது எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். இதை தான் மாற்று கட்சியினர் மட்டுமின்றி தமிழக மக்களும் விரும்புகின்றனர். மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்று எதிர் பார்க்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #EdappdiPalaniswami
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
டெண்டர் விடாமல் அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து, 150 சதவீதம் அதிக விலை கொடுத்து ஒரு லட்சத்து பத்தாயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய அ.தி.மு.க அரசு, கொள்ளை முடிவு செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநிலமெங்கும் மின் வெட்டு வரப்போகிறது என்று பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற முறையில் முன் கூட்டியே எச்சரிக்கை செய்தும், அ.தி.மு.க அரசின் நிர்வாக அலங்கோலத்தால் ஒரு செயற்கையான நிலக்கரிப் பற்றாக்குறையை ஏற்படுத்தி இப்படியொரு கொள்ளை லாபம் அடிக்கும் நிலக்கரி இறக்குமதியில் அ.தி.மு.க அரசும், அமைச்சர் தங்கமணியும் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது.
இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து அதானி எண்டர்பிரைசஸ் இறக்குமதி செய்யும் நிலக்கரிக்கு டன்னுக்கு 5008.45 ரூபாயும், ஸ்ரீ ராயல் சீமா என்ற கம்பெனிக்கு டன்னுக்கு 4936.25 ரூபாயும், யாசின் இம்பெக்ஸ் இந்தியாவிற்கு டன்னுக்கு 5098 ரூபாயும் கொடுப்பதற்கு அ.தி.மு.க அரசு ஒப்புக்கொண்டு, டெண்டர் விட வேண்டும் என்ற விதிகளையும் தளர்த்தி கொள்முதலில் ஈடுபடுகிறது என்ற செய்தி இந்த அரசு உறக்கமின்றி ஊழல் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.
மின் பகிர்மானக்கழகத்தில் நிலக்கரிப் பற்றாக்குறை இருக்கிறதா இல்லையா என்பதில் அமைச்சரவைக்குள்ளேயே முரண்பாடுள்ள நிலையில், தமிழ்நாடு டெண்டர் சட்ட விதிகளைத் தளர்த்தி, அதிக விலை கொடுத்து நிலக்கரியை வாங்க வேண்டிய நெருக்கடி ஏன் மின் பகிர்மானக் கழகத்திற்கு வந்தது? “நிலக்கரி இறக்குமதி பற்றி ஒரு தெளிவான கொள்கை மின் பகிர்மானக் கழகத்திடம் இல்லை” என்று சி.ஏ.ஜி அறிக்கையில் முன் கூட்டியே சுட்டிக்காட்டியும், நிலக்கரி இறக்குமதிக் கொள்கையை வகுக்காமல் இப்படி டெண்டர் விதிகளைத் தளர்த்துவது ஏன்?
அதானியின் கம்பெனிகள் ஏற்கனவே தமிழ்நாடு மின் வாரியத்திற்கு தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து கொடுத்தது கண்டு பிடிக்கப்பட்டு அந்த கம்பெனிகள் மீது மத்திய வருவாய் புலனாய்வுத்துறை விசாரணை நடக்கும் போது, மீண்டும் அதே கம்பெனியிடமிருந்து நிலக்கரி வாங்குவது ஏன்? தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத் தலைவரும், அரசின் மின்துறைச் செயலாளரும் எப்படி டெண்டர் இல்லாமல் நிலக்கரி வாங்க ஒப்புக்கொண்டார்கள்? என பல்வேறு கேள்விகள் வரிசையில் நிற்கின்றன.
அ.தி.மு.க அரசின் நிர்வாகச் சீர்கேட்டில் சிக்கி, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. “காற்றாலை மின்சார ஊழல்” “நிலக்கரி கொள் முதல் ஊழல்” “மின்சாரம் கொள்முதல் ஊழல்” என்று மெகா ஊழல்களின் “நரகபூமியாக” மின்பகிர்மானக் கழகம் மாறி நாறிக் கொண்டிருக்கிறது.
நிலக்கரி கொள்முதல் ஊழல் பற்றி மத்திய தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டினாலும், எதிர்க்கட்சிகள் புகார் சொன்னாலும், “நாங்கள் திருந்தவே மாட்டோம்” என்று பிடிவாதமான முடிவு எடுத்து இப்போது மீண்டும் நிலக்கரி ஊழலில் ஈடுபடுவது கடுமையான கண்டனத்திற்குரியது.
ஆகவே டெண்டர் விதிகளைத் தளர்த்தி, முறைகேடுகள் மூலம் ஒரு லட்சத்து பத்தாயிரம் டன் நிலக்கரி வாங்குவதை அ.தி.மு.க அரசு உடனே கைவிட வேண்டும் என்றும், நிலக்கரி தேவை என்றால் வெளிப்படையான டெண்டர் மூலம் வாங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். ஆளத் தெரியாதவர்கள் அரசாங்கப் பணத்தை சூறையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இந்த கொள்ளைக்குத் துணை போகும் அதிகாரிகளும் நிச்சயம் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய கால கட்டம் வரும் என்றும் எச்சரிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #MKStalin #ADMK #edappadipalaniswami
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பாலசந்திரன் ஆகியோர் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம், தற்போதைய நிலை, குடிநீர் வினியோகம்் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அமைச்சர் தங்கமணி பேசும்போது கூறியதாவது:-
தமிழக அரசு குடிநீர் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்்து வருகின்றது. நாமக்கல் மாவட்டத்தில் நீர் ஆதாரங்கள் இருக்கக்கூடிய இடங்களை கண்டறிந்து, அவற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கிட வேண்டும். மேலும் அரசு அலுவலர்கள் இப்பணிக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்திட வேண்டும்.
ஏற்கனவே பயன்படுத்தி வருகின்ற நீர் ஆதாரங்களை மேலும் செம்மைப்படுத்தி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு அதிக அளவில் நீர் கிடைப்பதற்கான நடவடிக்கைகளையும் அலுவலர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்கப்படுகின்ற குடிநீர் அனைத்து பொதுமக்களுக்கும் சரியாக சென்று சேரும் வகையில், உரிய நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் 4,89,213 குடும்பங்களுக்கு ஸ்மார்ட் ரேஷன்கார்டு வழங்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் 76,637 நோயாளிகளுக்கு ரூ.163.90 கோடி மதிப்பீட்டில் இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. 2018 -19-ம் நிதியாண்டில் முதல்-அமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் ரூ.11.23 கோடி மதிப்பீட்டில் 535 பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது.
2017-2018-ம் நிதியாண்டில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.29.19 கோடி மதிப்பீட்டில் 1,717 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அனைத்து அரசு அலுவலர்களும், பொதுமக்கள் அளிக்கின்ற மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களுக்கு உரிய தீர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, மாவட்ட வன அலுவலர் டாக்டர் காஞ்சனா, நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிய அ.தி.மு.க. அரசை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு இன்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:-
முட்டிப்போட்டு முதல்வரான எடப்பாடி பழனிசாமி தற்போது வீரவசனம் பேசிக் கொண்டிருக்கிறார். நன்றி விசுவாசத்திற்கும், விருந்து உபசரணைக்கும் பெயர் போன பகுதி மேற்கு மண்டலம். ஆனால் சசிகலா, தினகரனால் முதல்வரான எடப்பாடி பழனிசாமி அவர்களை கட்சியில் இருந்து நீக்கி துரோகம் செய்து அந்த மண்ணுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் பெற்றால் நான் அரசியலை விட்டே விலக தயார்.
இவ்வாறு அவர் பேசினார். #SenthilBalaji #ADMK
நாமக்கல்லில் இன்று அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் உதய் திட்டத்தில் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக இருக்கிற கோரிக்கையை நீக்கப்பட்டபிறகு தான் அந்த ஒப்பந்தத்தில் இணைந்தோம். எனவே, இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
மழை தொடர்பாக விடப்பட்ட ரெட் அலர்ட் சம்பந்தமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்து துறை சார்பில் கூட்டம் நடத்தினார்.
அதுபோல் மின்வாரியம் சார்பில் எனது தலைமையில் தலைமை செயலகத்தில் நாளை கூட்டம் நடைபெறுகிறது.
நேரம் வரும்போது தினகரன் தூதுவிட்டதற்கான ஆதாரங்களை வெளியிடுவேன். அ.தி.மு.க.ஏற்றுக் கொள்ளாததால் விரத்தியின் விளிம்பில் தங்க தமிழ்ச்செல்வன் உளறுகிறார். ஓற்றுமையாக உள்ள முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சரை பிரித்தாளும் சூழ்ச்சியை தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மூலமாக மேற்கொண்டார்.
ஆட்சியில் இல்லாத போதும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வெளியே ஓட்டல் கட்டி வரும் அவர் தான் ஊழல் செய்துள்ளார். இப்போது ஊழல், ஊழல் என்று சொல்கிறார். ஊழலுக்கு தலைவரே அவர் தான்.
மு.க.ஸ்டாலின், நாங்கள் காற்றாலையில் முறைகேடு செய்வதாக கூறி வருகிறார். நாங்கள் எந்த முறைகேடும் செய்யவில்லை. இது சம்பந்தமாக அவர்கள் வழக்கு தொடர்ந்தால் அதை சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Thangamani #OPanneerSelvam #TTVDhinakaran
நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகம் அருகே மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைக்கு சுயசேவை பிரிவு மற்றும் கிடங்கு ரூ.30 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் பாலமுருகன் வரவேற்றார். பி.ஆர்.சுந்தரம் எம்.பி., கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் கூட்டுறவு சங்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சுயசேவை பிரிவின் மூலம் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மளிகை பொருட்கள் மற்றும் அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் முன்னாள் தலைவர் சுகுமாரன், நாமக்கல் நகர கூட்டுறவு வங்கி தலைவர் டி.எல்.எஸ்.காளியப்பன், வீட்டுவசதி சங்கத்தின் தலைவர் விஜய்பாபு, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத், ஒன்றிய செயலாளர் குப்புசாமி, சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் சாதிக்பாஷா மற்றும் அரசு அதிகாரிகள், கூட்டுறவு ஒன்றியங்களின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் இலங்கை தமிழர்களுக்கு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இழைக்கப்பட்ட துரோகத்தை கண்டித்து பொதுக்கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்தது.
கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-
காலம் முழுவதும் கருணாநிதியை எதிரியாக கொண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது தான் அ.தி.மு.க. ஆகும். அதன் வழியில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் தற்போது சிறப்பாக ஆட்சி புரிந்து வருகின்றனர்.
ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கு கடந்த 2008-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்துகொண்டு இருந்தபோது, அவர் எப்படியும் சிறைக்கு சென்றுவிடுவார், நாம் முதல்-அமைச்சர் ஆகிவிடலாம் என்று அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் பேசியுள்ளனர். இதற்கான ஆதாரம் ஜெயலலிதாவின் கையில் கிடைத்ததை அடுத்து, அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களை கட்சியை விட்டே ஒதுக்கி வைத்தார்.
கருணாநிதி ஆட்சியில், 1996-ம் ஆண்டு டி.டி.வி.தினகரன் லண்டனில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் சொத்து வாங்கினார். அதுகுறித்து வழக்கில் ஜெயலலிதாவும் சேர்க்கப்பட்டார். இதையடுத்து டி.டி.வி.தினகரன் கருணாநிதியை சந்தித்து, இந்த வழக்கில் இருந்து என்னை மட்டும் விடுவித்துவிட்டு, வழக்கை வேகமாக முடித்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.
இதையடுத்து கருணாநிதிதான் அந்த வழக்கில் இருந்து டி.டி.வி.தினகரனை விடுவித்து, ஜெயலலிதாவுக்கு தண்டனை வாங்கி கொடுத்தார். இதனால் கருணாநிதியை விட டி.டி.வி.தினகரன் தான் ஜெயலலிதாவுக்கு துரோகி ஆனார்.
தற்போது அவர் 18 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு மு.க.ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்து, இந்த ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்து வருகிறார். அ.தி.மு.க.வின் எதிரியான தி.மு.க.வுடன், டி.டி.வி.தினகரன் உடன்படிக்கை போட்டு உள்ளார். இதனால் அவர் பக்கம் சென்றவர்கள் இந்த உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.
கட்சியில் 98 சதவீதம் தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர். டி.டி.வி.தினகரன் 18 எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய சொல்லிவிட்டு, தேர்தலை சந்தித்து இருந்தால் அவருக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என்று வைத்து கொள்ளலாம். தற்போது நடைபெறும் ஆட்சியை கட்சியை கலைத்து விட்டு கட்சியை கைப்பற்ற டி.டி.வி. தினகரனும், ஆட்சியை கைப்பற்ற மு.க.ஸ்டாலினும் திட்டமிட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார். #MinisterThangamani
அமைச்சர் தங்கமணியை பற்றி முன்னாள் எம்.எல்.ஏ.சரஸ்வதி வாட்ஸ்-அப்பில் அவதூறாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி சரஸ்வதியை கைது செய்தனர்.
இவர் மீது 505 (பி) பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் பேசுதல், 153- ஆத்திரம், கோபம் ஏற்படும் வகையில் தகவல் பரப்புதல், 194(பி)-அசிங்கமாக திட்டுதல், 504- கோபமாக பொதுமக்களுக்கு பீதி ஏற்படும் வகையில் பேசுதல், 506(1)-கொலை மிரட்டல் விடுவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி கைது செய்யப்பட்டதற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காந்திச்செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு, நீதிமன்றத்தை அவதூறாக பேசிய பா.ஜ.க. தேசிய தலைவர் எச்.ராஜாவையும், தமிழக அரசு மற்றும் முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய கருணாசையும் கைது செய்ய முடியாத நிலையில், வாட்ஸ்-அப்பில் பொய்யான தகவல் பரப்பியதாக கூறி பொய் வழக்கு போட்டு தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இது குறித்து தலைமையிடத்தில் பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர், அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழக மின்சார வாரியம் காற்றாலை மின்சாரம் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்து இருப்பதாகவும், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் நான் கூறினேன்.
இதற்கு அமைச்சர் தங்கமணி அளித்துள்ள பதில் தெளிவாக இல்லை. இதற்காக என்மீது வழக்கு தொடருவேன் என்றும் கூறியுள்ளார்.
இதேபோல் குட்கா ஊழலை முதன் முதலில் நான் வெளிக்கொண்டு வந்தேன். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என் மீது வழக்கு தொடரப்போவதாக கூறினார். ஆனால் இதுவரை அவர் என் மீது எந்த வழக்கும் தொடரவில்லை. ஆனால் நான்தான் அவர் மீது வழக்கு தொடர்ந்தேன்.
இப்போது அமைச்சர் தங்கமணி என்மீது வழக்கு தொடரப்போவதாக கூறியுள்ளார். காற்றாலை மின்சார கொள்முதலில் நடந்த ஊழலுக்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளேன். எனவே அமைச்சர் தங்கமணி என்மீது வழக்கு தொடர தயாரா?
ஒருவாரம் வரை காத்திருக்கிறேன், அவர் என் மீது வழக்கு தொடரட்டும். இல்லையெனில் நான் அவர் மீது வழக்கு தொடருவேன். அமைச்சர் தங்கமணி மீது நான் கூறிய புகார் ஆதாரப்பூர்வமானது. அறிக்கையில் நான் கூறிய விவரங்களுக்கு அமைச்சர் தெளிவாக பதில் அளிக்கவில்லை.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். #TNMinister #Thangamani #DMK #MKStalin
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்